இந்தியா
Trending

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…!!

தமிழ்நாடு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழை நீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அதிகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல், அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button