உலகம்
Trending

ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்; கடுமையான பாதிப்பு – பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு..!!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நேற்று அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர். அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. விரிசல்களும் ஏற்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் காணப்பட்டது. இஷிகாவா மாகாணத்தில் உள்ள வஜிமா நகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கேஸ் குழாய்கள் உடைந்து கேஸ் வெளியேறியதால் தீப்பிடித்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கொக்கைடோ தீவு முதல் கியுசு தீவு வரை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக நேற்று ஜப்பானில் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதேபோல் தொடர் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றதாகவும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மீட்க நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போது ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button