உலகம்

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி மாணவர் சுட்டுக் கொலை: ஹரியாணாவில் 5 பேர் கைது

பசு கடத்துபவர் எனக் கருதி பள்ளி மாணவர் சுட்டுக் கொலை: ஹரியாணாவில் 5 பேர் கைது

ஹரியாணா மாநிலம் ஃபரிதாஃபாத்தில் 12-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர் ஒருவரை ‘பசு கடத்துபவர்’ என தவறுதலாக நினைத்து, காரில் விரட்டப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலுக்காக சம்பவம் தொடர்பாக ஐந்து பசுக் காவலர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆரியன் மிஸ்ரா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஷங்கி, ஹர்ஷித் மற்றும் இரண்டு பெண்களை டெல்லி – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, ரெனால்ட் டஸ்டர் மற்றும் டோயோட்டா ஃபார்டியூனர் ஆகிய சொகுசு கார்களில் சிலர் பசுக்களைக் கடத்திச் செல்வதாக பசு காவலர்களுக்கு தகவல் வந்ததாம். இதனைத் தொடர்ந்து அந்த பசுக் காவலர்கள் குழு, கடத்தல்காரக்களைத் தேடி அலைந்தபோது, அவர்கள் கண்ணில் ஒரு டஸ்டர் கார் தெரிந்தது. உடனடியாக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆரியனின் நண்பன் ஹர்ஷித்திடம் காரை நிறுத்தும்படி அந்தக் குழு கூறியுள்ளது. என்றாலும், ஹர்ஷித் காரை நிறுத்தவில்லை. ஏனெனில் அவரின் நண்பர் ஷங்கிக்கு ஒருவருடன் பகை இருந்ததால், அவரைக் கொல்ல அவர்கள் குண்டர்களை அனுப்பியிருப்பதாக நினைத்ததால் காரை நிறுத்தவில்லை.

ஆரியனின் நண்பர்கள் காரை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த பசக் காவலர்கள் குழுவினர், அந்தக் காரை விரட்டத் தொடங்கினர். அதனை விரட்டிப் பிடித்து துப்பாக்கியால் சுட்டனர். அப்போது துப்பாக்கித் தோட்டா ஒன்று பின் இருக்கையில் இருந்த ஆரியனின் கழுத்து அருகே தாக்கியது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் சுட்ட நிலையில், ஆரியனின் நண்பர்கள் காரை நிறுத்தினர். இரண்டாவது தோட்டா ஆரியனின் நெஞ்சில் தாக்கியது.

இதனிடையே, அந்தக் காரில் இரண்டு பெண்கள் இருப்பதைப் பார்த்த பசுக் காவலர் குழுவினர் தாங்கள் தவறான நபரைச் சுட்டுவிட்டதை அறிந்து அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். துப்பாக்கித் தோட்டா காயம் அடைந்த ஆரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளில் உயிரிழந்தார். சம்பவத்தின் போது பயன்படுத்துப்பட்ட துப்பாக்கியும் சட்ட விரோதமானது என்று போலீஸார் தெரிவித்தனர். பசுக் காவலர்களின் ஐந்து பேர் அடங்கிய குழு தற்போது கைது செய்யப்பட்டு போலீஸாரின் காவலில் உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button