உலகம்
Trending

பள்ளி குழந்தைகளுக்கு கத்தி குத்து; பற்றி எரியும் அயர்லாந்து – டென்ஷனான மக்களால் வெடித்தது வன்முறை…!!

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பர்னல் சதுக்கம் அருகே இயங்கி வரும் தொடக்க பள்ளிக்கு வெளியில் மர்மநபர் ஒருவர் நேற்று முன்தினம் கையில் கத்தியுடன் சுற்றி வந்திருக்கிறார். அப்போது பள்ளி முடித்து மாணவர்கள் வெளியில் வந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் மாணவர்கள் மீது கத்தியால் சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் மாணவர்கள் அலறி ஓட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மர்மநபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 5 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்மணிக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் சிலர் ஆவேசமடைந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறை வாகனங்கள், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருக்கின்றன. இதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தவறான தகவல்கள் பரவியதே இந்த வன்முறைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல இந்த கலவரத்திற்கு அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள்தான் காரணம் என்றும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. போராட்டக்காரர்கள், அயர்லாந்தில் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராக தீவிரமான வன்முறையை கையில் எடுத்திருக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்தவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் 400 போலீஸ் அதிகாரிகள் மத்திய டப்ளின் பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், கலவரத்தில் தொடர்புடைய 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து அயர்லாந்தின் நாடாளுமன்ற கட்டிடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பள்ளி குழந்தைகளுக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button