இலங்கை
Trending

மோடிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி – கடுகடுத்த ஓபிஎஸ்…!!!

இந்தியா: தமிழ்நாடு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இதற்கு எதிராக சளைக்காமல் பல வழக்குகளை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது…

கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பொதுக் குழுவில் நான் வரவு – செலவு கணக்கை வாசிக்க வேண்டும், அந்த வாய்ப்பைக் கூட தராமல் நம்பிக்கை துரோகம் செய்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது நாங்கள் ஆதரித்திருந்தால் அன்றைக்கே அரசு கவிழ்ந்திருக்கும்.

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு அன்று அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றினோம். ஆனால், அந்த நன்றி எடப்பாடிக்கு கொஞ்சம் கூட இல்லை. ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தேன் என்று எடப்பாடி கூறுகிறார். துணை முதல்வர் பதவியே அதிகாரமில்லாத டம்மி பதவி என்பதற்காக நான் வேண்டாம் என்று சொன்னேன்.

ஏற்கனவே எனக்கு ஜெயலலிதா இரண்டு முறை முதலமைச்சர் பதவியை தந்தார். ஆனால், வலுக்கட்டாயமாகத்தான் துணை முதல்வர் பதவியில் என்னை நீடிக்கச் செய்தார்கள். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து பத்திரிகைகளில் பல விமர்சனங்களை எழுத வைத்தார். அப்போதும் பொறுமை காத்தேன்.

ஜெயலலிதா எப்போது இறப்பார் என்று காத்திருந்து, எப்படியாவது என்ன கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சதிவேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். நான் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதவன். ஆனால், தனக்கு முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

கூட்டணியில் அருகில் அமர வைத்த பிரதமர் மோடிக்கே துரோகம் செய்யும் வகையில் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நாடாளுமன்றம், உள்ளாட்சி, சட்டமன்றம் என அனைத்து தேர்தல்களில் அதிமுக தோல்வியைத்தான் சந்தித்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button