இந்தியா
Trending

வள்ளுவரை கறைபடுத்த முடியாது – அண்ணாமலை, ஆர்.என்.ரவிக்கு ஸ்டாலின் மறைமுக பதில்!

இந்தியா: தமிழ்நாடு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

உலகம் வியக்கும் திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் காவி வண்ணம் அடிக்க பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்தல், காவி வண்ணம் அடித்தல் ஆகியவற்றை பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செய்து வருகின்றன.

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார்.

அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவியும் காவி உடை அணிந்த வள்ளுவருக்கு தனது மனைவியுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வள்ளுவரை பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பாடியவரை எப்படி சனாதன பாரம்பரிய துறவி என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி குறள் வழியே நம் நெறி! என்று பதிவிட்டுள்ளார்.

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று ஆர்.என்.ரவி, அண்ணாமலை ஆகியோருக்கு முதல்வர் பதிலளித்துள்ளார் என்கின்றனர் திமுகவினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button