உலகம்
Trending

60 லட்சம் உடல்கள் – உலகின் மிகப்பெரிய கல்லறை தோட்டம் எங்கு இருக்கிறது தெரியுமா..??

ஈராக்கில் உள்ள புனித நகரமான நஜாஃப்-தான் உலகின் மிகப்பெரிய கல்லறை தோட்டத்திற்கு சொந்தமானது. அங்கு கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, வாடி அல்-சலாம் கல்லறை தோட்டமானது அரச குடும்பம் மற்றும் விஞ்ஞானிகள் புதைக்கப்படும் இறுதி இடமாக உள்ளது. இந்த கல்லறை தோட்டமானது, நகரின் மையத்திலிருந்து வடமேற்கு வரை நீண்டு, நகரத்தின் பரப்பளவில் 13 சதவீதத்தை கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, வாடி அல்-சலாம் அதன் வழக்கமான விகிதத்தில் இரண்டு மடங்கு விரிவடைந்துள்ளதாக கூறியுள்ளது. கூடுதலாக, அங்குள்ள கல்லறைகள் இடுக்கமான கட்டிடங்கள் போல் காட்சியளிக்கின்றன. மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களில் அல்-ஹிராவின் அரசர்கள், அல்-சசானி சகாப்தத்தின் தலைவர்கள் மற்றும் சுல்தான்கள், ஹம்தானியா, பாத்திமியா, அல்-புவைஹியா, சஃபாவாயா, கஜர் மற்றும் ஜலைரியா மாநில இளவரசர்கள் உள்ளனர். இங்கு உள்ள கல்லறைகளில் இரு வகைகள் உள்ளன, அவை கீழ் கல்லறைகள் மற்றும் கோபுரங்கள் போன்ற உயர் கல்லறைகள் ஆகும்.

வாடி அல்-சலாமில் பல பிரபலமானவர்களின் கல்லறைகள் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். முகமது நபியின் மருமகன் அபி தாலிப் உட்பட பல முக்கிய பிரபலங்களின் கல்லறைகள் இங்கு உள்ளன. மேலும், இந்த கல்லறை தோட்டம் ஒரு கலாச்சார பாரம்பரியத்தின் தனித்துவமான உதாரணத்திற்கு சாட்சியாக திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு இது ஒரு முக்கிய இடம் என்று அல்-ஜசீரா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரம் பேர் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றனர்.

இங்கு ஒரு கல்லறை தோண்டுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 ஆயிரம் செலவாகும் என்றும், கல்லறைக் கற்கள் ரூ.14,500 முதல் ரூ.17,000 வரை செலவாகும் என்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கல்லறை தோட்டமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த கல்லறை தோட்டத்திற்கு செல்பவர்களை வழிநடத்த மேப் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button