![Man arrested for making bomb threat to schools in Canada](https://dhuruvan.com/wp-content/uploads/2023/12/23-6569534e3acd4.jpeg)
கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தில் பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோவில் நவம்பர் தொடக்கத்தில் பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சந்தேக நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய நபர் பிரஸ்ஸல்ஸ் மற்றும் அண்டை பிராந்தியங்களில் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் குறைந்தது 27 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 1ம் திகதி ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அத்துடன், வெடிகுண்டு வைக்கப்பட்ட இடங்களை தெரிவிக்க பெருந்தொகை கைமாற வேண்டும் எனவும் அந்த நபர் கோரியுள்ளார்.
ஆனால் பொலிசார் முன்னெடுத்த தீவிர சோதனையில், வெடிகுண்டு எதையும் கண்டெடுக்கவில்லை. இந்த நிலையிலேயே பெல்ஜியத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
விசாரணையில், தொடர்புடைய நபரே ஒன்ராறியோவிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். அந்த நபர் பெல்ஜியம் அதிகாரிகளிடம் 10 மில்லியன் யூரோ தொகையை கோரியிருந்ததாகவும், தொகை கைமாறினால் மட்டுமே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளை வெளியிட முடியும் எனவும் பேரம் பேசியுள்ளார்.
மொராக்கோ அதிகாரிகளிடம் அந்த நபர் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் தீவிரவாத பின்னணி இதில் இல்லை எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.