![“Hatred has increased in our country” - Vishnu Vishal](https://dhuruvan.com/wp-content/uploads/2024/02/1194905-780x470.jpeg)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால், “சில நாட்களுக்கு முன்பு ‘பாரத் vs இந்தியா’ விவகாரத்தின்போது இரண்டும் ஒன்று தானே, எதற்கு இந்த பெயர் மாற்றம் என யோசித்தேன். அதை நான் ட்வீட்டாக பதிவு செய்யும்போது அந்தப் பதிவு வைரலாகி, நிறைய கமெண்ட்ஸ்கள் வந்தன. நான் இதுவரை அரசியல் தொடர்பான எதையும் பதிவிட்டதில்லை. காரணம் எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. இந்த விவகாரத்தில் ஓர் இந்திய குடிமகனாக எனக்கு என்ன தோன்றியதோ அதை பதிவு செய்தேன்.
எனக்கு தப்பாக தெரியவில்லை. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பு மிகப்பெரியது. 2 நாட்களில் நான் ‘ஆன்டி’ இந்தியன் ஆகிவிட்டேன். ‘ஆன்டி’ இந்துவாகிவிட்டேன். நிறைய ‘ஆன்டி’யாகிவிட்டேன். ‘ப்ரோ’ (Pro) ஆகிவிட்டேன். என் மனைவி வெளிநாட்டவர் என்பதால் நான் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை என ஆகிவிட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இத்தனை வெறுப்பு, ஏன் நாம் எல்லோரும் இப்படி இருக்கிறோம், ஒருத்தருக்கு ஒருத்தர் கொள்கைகள் மாறலாம்.
கருத்துகள் மாறலாம். அதற்கு மரியாதை கொடுப்பது தானே மனிதம். பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்தி பேசக்கூடாது. நம் நாட்டில் இந்த வெறுப்பு அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது. இந்தப் படம் வெறுப்பு இருக்ககூடாது என்பதைத்தான் பேசுகிறது. ஒரு மதத்துக்கு மற்ற மதத்தினர் மரியாதை கொடுக்க வேண்டும். இந்தப் படம் அதனைச் சொல்லிக்கொடுக்கும்” என்றார்.