இந்தியா
Trending

நான்காயிரம் கோடி செலவு செய்ததால் தான் மழையை சமாளிக்க முடிந்தது – எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!!

தமிழ்நாடு

வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று புயலாக வலுவடைந்து.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்தது. தற்போது 210 கிமீ தொலைவில் விலகிச் சென்றதால் தற்போது சென்னையில் மழை குறைந்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த காலங்களை விட அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும், இயல்பு நிலையை வெகு விரைவில் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மழையால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.

2015-ல் சென்னையில் செயற்கை வெள்ளம் ஏற்பட்டது. தற்போது இயற்கையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2015 மழையின் போது 119 பேர் பலியான நிலையில், இம்முறை அதிகம் மழை பெய்தும் 7 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்றார்.

மேலும், ரூ.4000 கோடி செலவு செய்ததால் தான் 47 ஆண்டுகளுக்கு பின் வந்த மழையை சமாளிக்க முடிந்தது என எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கின. மேலும், மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button