![Annamalai has appealed to the Tamil Nadu BJP officials to help fulfill the basic needs of the people](https://dhuruvan.com/wp-content/uploads/2023/12/405411583_860947419365017_2943525485000057959_n-780x450.jpg)
தமிழ்நாடு
மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவுங்கள் என, தமிழக பாஜக நிர்வாகிகளை, மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்விடுத்துள்ளார்
இது தொடர்பில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு வரை கன மழையும், காற்றும் இருக்க கூடும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
இதனால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவுவதற்காக தமிழக பாஜக சார்பில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக .சகோதரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து, குழுவாக செயல்பட்டு மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவ வேண்டும்.
சென்னை வரும் ரயில்கள் மழை காரணமாக புறநகர் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிகிறேன். ரயில் பயணியருக்கு தேவையான உதவிகளையும் இயன்ற வரையில் பாஜகவினர் செய்து தர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த கடினமான நேரத்தில் மிக கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.