இந்தியா
Trending

விஜயகாந்த் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்…!!!

தமிழ்நாடு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.

தேமுதிக தரப்பில் நவ.20 அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

விஜயகாந்த் 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகியிடம் பேசினேன். ஏற்கனவே உறுப்பு மாற்று சிகிச்சை நடந்ததை அடுத்து மூச்சுத்திணறல், இருமல் உள்ளதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தேவைப்படும்போது ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும் தகவல் உண்மை இல்லை என தேமுதிக தலைமை மறுத்த நிலையில், தேவைப்படும்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது தேமுதிகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button