![Central Minister Piyush Goyal visited Vijayakanth's house to pay his respects](https://dhuruvan.com/wp-content/uploads/2024/01/GDUIKbmWAAAL30f-780x470.jpeg)
இந்தியா: தமிழ்நாடு
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிச. 28-ம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் பொதுமக்கள் உள்பட பலர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த விஜயகாந்த்தின் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அங்கு வைக்கப்பட்டுள்ள அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் உள்பட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் பியூஷ் கோயலுடன் கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது…
மறைந்த விஜயகாந்தின் குடும்பத்தினரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். எனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா உலகிற்கு அவரது விரிவான பங்களிப்புகளுக்காகவும், சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மேம்படுத்துவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கேப்டன் என அன்புடன் நினைவுகூரப்படுவார். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.