இந்தியா
Trending

வெள்ள நிவாரணம் இன்னும் வரவில்லை – அமித்ஷாவை பாக்க நேரில் செல்லும் தமிழ்நாடு எம்பிக்கள்…!!

இந்தியா: தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் சிக்கின. அதேபோல டிசம்பர் 17, 18ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கியுள்ளது.

மத்திய அரசு வெள்ள பாதிப்புகளுக்காக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 900 கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்கியது. இது வழக்கமாக வரும் நிதிதானே தவிர பெருவெள்ளத்திற்கென கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு பேரிடர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழக அரசு 37,907.19 கோடி ரூபாயை ஏற்கெனவே கோரியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளை மத்திய குழுவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேரில் பார்வையிட்டதாகவும், அதேபோல தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மத்திய குழுவினர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி பிரதமர் மோடி திருச்சியில் பேசியபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், மத்திய குழுக்களின் வருகைக்குப் பின்னரும், மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழ்நாடு அரசு 2 கோரிக்கை மனுக்கள் அளித்த பின்னும் மத்திய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் மத்திய அரசு நிவாரண நிதியினை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியுள்ளதாகவும் கூறிய அவர், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு இதுவரை 2,100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் விவரித்துள்ளார்.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button