
Shanu
இலங்கை கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையில் மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5 மணிக்கு பிரான்சில் ‘Théâtre du Blanc Mesnil’ அரங்கத்தில் நடைபெற இருக்கின்றது. ‘எங்கட பெடியள்’ எனும் நாமம் கொண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச இணை அனுசரணையாளர்களின் ஆதரவுடன் இலங்கை கலைஞர்களை முதன்மையாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்களும் நிகழ்வை சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
“இசையும் கலையும், இனி இறக்குமதிக்கான காலம் அல்ல! ஏற்றுமதிக்கான காலம். எம்மவர்களை நாங்கள் தான் கொண்டாட வேண்டும். உலகம் பூராவும் பரவி இருக்கும் எங்கள் மக்கள் எங்கள் கலைஞர்களை கொண்டாடப் போகின்றார்கள்.
அந்த இசையோடு தமிழையும், தமிழ் மரபுகளையும் கொண்டு செல்ல வேண்டும். செல்கின்ற நாடுகளில் பெற்றுக்கொண்ட கலாச்சார பரிமாற்றங்களோடு எங்கள் மக்கள் மத்தியிலும் சொல்லப்பட வேண்டும். துறை சார்ந்து தொழில் முறை கலைஞர்களாகவும் அவர்கள் வளர வேண்டும்.
அவற்றுக்கான வாய்ப்புகளையும், வழி வகைகளையும் நேர்த்தியாக உருவாக்கி நாடு கடந்து சர்வதேசங்களில் எங்கள் கலைகளை கொண்டு செல்வதே எங்களது விருப்பம்.” என கருடன் ப்ரொடக்ஷன் நிறுவனர்/பணிப்பாளர் ‘எல்றோய் அமலதாஸ்’ இவ்வாறு தெரிவித்தார். இலங்கை ‘கருடன் தயாரிப்பு நிறுவனம்’ தொடர்ச்சியாக இலங்கை கலைஞர்களுக்கு பல்வேறு மட்டங்களில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. பல முழு நீள திரைப்படங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கின்றது. மேலும் இலங்கை கலைஞர்களை சர்வதேச மட்டங்களில் பிரகாசிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட அனுசரணைகளையும் வழங்குகின்றது.