இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில்படி, புலைமைப்பரிசில் திட்டம் நேற்றைய தினம் (01) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, நாட்டில் உள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்திலிருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.
2022 (2023) ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது.
குறித்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.
அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதாரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.