இந்தியா
Trending

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை – அமைச்சர் பதவி பறிபோனது..!!

தமிழ்நாடு

1996-2001-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ1.36 கோடி பொன்முடி சொத்து குவித்தார் என 2011-ல் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது. ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார்.

இதனால் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதனையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். பொதுவாக வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களது எம்பி அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படும். தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி அமைச்சர் பதவியை பறிகொடுத்துவிட்டார். மேலும் இந்த 3 ஆண்டு தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் தேர்தலில் பொன்முடியால் போட்டியிடவும் முடியாது.

பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பொன்முடி, மனைவி விசாலாட்சி மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 30 நாட்களுக்கு பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி சரணடைய வேண்டும் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

ஏற்கனவே தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்த போதும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். தற்போது பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்ததுடன் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. இதனால் பொன்முடியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button